லாபம் இல்லையென்றால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது; பி.எஸ்.என்.எல். அதிரடி முடிவு

logo
நிறுவனம் லாபத்தில் இல்லையென்றால் அடுத்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என அரசு பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, கர்நாடகாவில் மொபைல் டேட்டா ஆப்லோடு வசதியை துவக்கி வைத்து  அந்நிறுவனத்தின் தலைவரும், இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்தவை பின்வருமாறு:- 
பி.எஸ்.என்.எல். வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாகும். 2017-ம் ஆண்டு என்பது 3-வது முறையாக சம்பள மறுஆய்வு கமிட்டி மூலம் பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்வதற்கான ஆண்டு. ஆனால், நிறுவனமானது லாபத்தில் இல்லையென்றால் சம்பளம் உயர்த்தப்பட மாட்டாது. இதற்கு முன்னர் ஏர் இந்தியா நிறுவனமும் இதேபோல் செயல்பட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு நமது லாப நட்டக் கணக்கை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நிறுவனத்தை வருமானப் பாதையில் கொண்டு செல்வதே ஊழியர்களின் முதன்மைப் பணி. இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டு மட்டுமே சென்ற நாட்கள் போய்விட்டன. வருவாய் மட்டுமே இனி முதல் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

4 ஆண்டுகள் தொடர் நட்டத்திற்கு பின் முதல்முறையாக சென்ற நிதியாண்டில் ரூ.672 கோடி லாபத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.