நெட் நியூட்ராலிட்டி பிரச்னை

கடந்த ஏப்ரல் மாதம் வரை 'நெட் நியூட்ராலிட்டி' என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு கூட, அதுகுறித்து ஊடகங்களும், சமூக வலைதளங்களில் உள்ளவர்களும் வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு காட்டுத்தீயாக பரவியது நெட் நியூட்ராலிட்டி பிரச்னை.

இதற்கு மூலகாரணமாக இருந்தது ஏர்டெல் ஜீரோ திட்டம்தான். இந்த திட்டத்தில் இணையும் நிறுவனங்களின் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், மற்ற இணையதளங்கள் கட்டணமாக்கப்படும் என்ற அறிவிப்பே இந்த புரட்சி போராட்டத்துக்கு காரணமானது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் குரல்கள் ஒலிக்க துவங்கின. 

மக்கள் தங்களது எதிர்ப்புகளை 'நெட் நியூட்ராலிட்டி'க்கு எதிராக, #இணையத்தைகாப்போம் #SaveTheInternet என்ற ஹாஷ்டேக்குகளை பயன்படுத்தி, இந்தியாவில் இணைய சமநிலை வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தினர். செல்போன் நெறிமுறையாளரான 'ட்ராய்', மின்னஞ்சல் மூலம் மக்கள் கருத்துக்களை கேட்டது. அதன் அடிப்படையில் அரசின் தொலைதொடர்பு துறை இன்று அறிக்கை மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு வழங்கியுள்ளது.
அரசின் தீர்வு என்ன?
அதில், 'நெட் நியூட்ராலிட்டி' விவகாரத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர்களான மக்களின் நலன்தான் முக்கியம், அதற்கு ஏற்பதான் செல்போன் நிறுவனங்களும், ஓடிடி எனும் ஆப்ஸ் சேவை நிறுவனங்களும் தங்களது சேவையை வழங்க வேண்டும். பல லட்சம் பேரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இணைய பயன்பாட்டை செல்போன் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. ஓடிடி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்குவதில், தகவல் பரிமாற்றத்திற்கு எந்த நெறிமுறையும் இல்லாமல் தங்களது பழைய நடைமுறையிலேயே இயங்கலாம் என கூறியுள்ளது. ஆனால் இது தகவல் பறிமாற்றத்துக்கு மட்டுமே என்று கூறியுள்ளது. அதே போன்று தொலைதொடர்பு நிறுவனங்களையும் அனைவருக்கும் அனைத்து தளங்களையும் இணைய சமநிலையோடு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

வாட்ஸ்அப், வைபருக்கு ஆபத்தா?

இதனால் வாட்ஸ் அப், வைபர் போன்ற ஆப்ஸ்களுக்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அவர்கள் தகவல் பரிமாற்றத்தை மட்டும் இலவசமாக வழங்கலாம். ஆனால் விஓஐபி(VOIP) எனும் இணையதள கால் சேவைகளை இலவசமாக வழங்க முடியாது. அதனை நெறிமுறைப்படுத்த வேண்டும். அவை தொலைதொடர்பு நிறுவனங்களின் அழைப்பு கட்டணங்கள் போலவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் போன்ற சேவைகள் பாதிப்புக்குள்ளாகும், குறிப்பாக வாட்ஸ் அப் மூலம் பேசினால், அழைப்புக் கட்டணங்கள் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் தகவல் பரிமாற்றத்துக்கு ஏற்றதுதான் இந்த ஆப்ஸ்கள்; அதில் எந்த பிரச்னையும் இருக்காது என்கின்றனர் சிலர். 

ஆனால் சர்வதேச அழைப்புகளுக்கு இந்த நெறிமுறைகளில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், " அப்பாடி... ஒரு வழியாக இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டி நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது!" என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கட்டணம் உயருமா?

தற்போது நெட் நியூட்ராலிட்டி நிறைவேறியுள்ள நிலையில், ஏர்டெல் ஜீரோ போன்ற தொலைபேசி நிறுவனங்களது கொள்கைக்கு மாறுபட்ட தீர்வாக இது இருப்பதால், வேறு வழியின்றி நெட் நியூட்ராலிட்டியை ஏற்றுக்கொண்டாலும் கட்டணங்களை அதிகப்படுத்தலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது. ஏற்கெனவே இணைய பயன்பாட்டு கட்டணம் அதிகமாக இருப்பதால், அது இன்னும் அதிகரித்தால் மக்கள் அவதிப்படுவார்கள்.
இணைய சமநிலையை கொண்டு வந்துள்ள அரசு, கட்டணக்களுக்கும், நிறுவனங்களுக்கும் சமமான ஒரு கொள்கையை கொண்டு வந்து நெறிமுறைபடுத்தினால் நெட் நியூட்ராலிட்டி மட்டுமின்றி, அனைவருக்கும் இணைய சேவையை கொண்டு சேர்க்க முடியும்.

இதையும் அரசு கவனத்தில் கொண்டால் இந்தியா, இணையத்தால் முழுமையாக இணைக்கப்பட்ட நாடாகும்.

-நன்றி அன்பைதேடி