உங்களை வேவுபார்க்கிறதா ஏர்டெல்? - அம்பலப்படுத்தியவருக்கு நோட்டீஸ்!

பெங்களூரூவைச் சேர்ந்த புரோகிராமர் தேஜேஷ் GN. கடந்த ஜூன் 3-ம் தேதி ஏர்டெல் 3ஜி நெட்வொர்க் மூலம் தன்னுடைய வலைதளத்தைப் பயன்படுத்திருக்கிறார். அப்போது தளத்தின் சோர்ஸைச் சோதனை செய்தபோது ஒரு வித்தியாசமான ஜாவாஸ்க்ரிப்ட் (Anchor.js) கோடு சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். ஏனென்றால் ஒரு வலைதளத்தில், பயனீட்டாளரின் அனுமதியில்லாமல் ஜாவாஸ்க்ரிப்டைத் திணிப்பது தவறானது. தேஜேஷ் தன் வலைதளத்தில் இன்னொரு iFrame கோடும் இருந்ததை பின்னர் கண்டுபிடித்தார்.
இந்த இரு கோடுகளிலும் இருந்தது ஒரே ஒரு ஐபி முகவரி. 223.224.131.144 எனும் இந்த ஐபி முகவரியை ட்ரேஸ் செய்தபோதுதான் தேஜேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், இந்த ஐபியை வைத்திருந்தது பெங்களுரூவில் இருக்கும் பாரதி ஏர்டெல் நிறுவனம். இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத தேஜேஷ், பிரபல GitHub வலைதளத்தில் இதை அம்பலப்படுத்தினார்.
இங்கேதான் ஒரு சின்ன ட்விஸ்ட்.

அடுத்த சில நாட்களில் இஸ்ரேலைச் சேர்ந்த பிளாஷ் நெட்வொர்க்ஸ் எனும் மும்பையில் இருந்த தனது வழக்கறிஞர்கள் மூலம் தேஜேஷுக்கு ஒரு Cease & Desist நோட்டீஸை அனுப்ப, ஷாக்காகி விட்டார் தேஜேஷ்.
ஏர்டெல் நிறுவனம் பயன்படுத்தியிருந்த ஜாவாஸ்க்ரிப்ட்டுக்கு உரிமை கோரியிருந்த இந்த நிறுவனம், இதைப் பற்றிய தகவல்களை இணையத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறு தேஷேஜ்-க்கு நோட்டீஸில் தெரிவித்திருந்தது. மேலும், தேஜேஷ்-ன் நடவடிக்கைகள் ஐ.பி.கோ 1860, தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் செக்‌ஷன் 2000-படி சட்டப்படி தவறு என்கிறது ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ்.

இந்த நிறுவனம் தேஜேஷுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு மட்டும் நிற்காமல், GitHub வலைத்தளத்துக்கும் DMCA (Digital Millenium Copyright Act) டேக்-டவுன் நோட்டீஸை அனுப்பி தேஜேஷ் பதிவேற்றியிருந்த தகவல்களை அகற்றவும் வைத்தது. ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் நோட்டீஸில் தன்னுடைய Anchor.js ஜாவாஸ்க்ரிப்ட்டுக்கு உரிமை கோரியிருந்தால், இந்த ஜாவா கோடு மூலம் அந்த நிறுவனக்கும், ஏர்டெல்லுக்கும் என்ன காரியம் ஆகிறது என்று குறிப்பிடவேயில்லை. இத்தனைக்கும் ஏர்டெல், ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ்-ன் வாடிக்கையாளர்.

இங்குதான் நெட் நியூட்ராலிட்டி பிரச்னையும் சேர்கிறது. ஏற்கனவே இந்தப் பிரச்னையில் ஏர்டெல்லின் பெயர் அடிவாங்கியது எல்லோருக்கும் தெரியும். இப்போது ஏர்டெல்லின் இந்த செயல் அம்பலப்படுத்தப்பட்டு இருப்பதால், மேலும் பிரச்னைதான். ஏனென்றால், ஒரே வலைதளம் ஏர்டெல் நெட்வொர்க்கில் ஒரு மாதிரியும், வேறு ஒரு நெட்வொர்க்கில் வேறு மாதிரியும் தெரிவது தவறுதான்.
ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்கள் இணையப் பயன்பாட்டை கணக்கிடுவதற்கான தொழில்நுட்பம்தான் இது எனவும், ஒரு தனியார் நிறுவனம் மூலம் இதைச் செய்வதாகவும் விளக்கம் அளித்திருக்கிறது. மேலும், ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் அனுப்பிய நோட்டீஸுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்திருக்கிறது.

ஒரு இந்திய நிறுவனத்தின் செயல் குறித்து இணையத்தில் பதிவிட்டால், இஸ்ரேலில் இருந்து லீகல் நோட்டீஸ்! நல்லா இருக்கு!

பின்குறிப்பு: வோடஃபோன் நிறுவனமும் ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு வாடிக்கையாளராம்!