டிராய் நடவடிக்கையால் எஸ்.எம்.எஸ்., செல்போன் கட்டணம் குறைகிறது!
புதுடெல்லி: டிராய் நடவடிக்கையால் செல்போன் ரோமிங் கட்டணங்களும், எஸ்.எம்.எஸ். கட்டணங்களும் மே 1 ஆம் தேதி முதல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், செல்போன் சேவை நிறுவனங்கள் வசூலிக்கும் தேசிய ரோமிங் அழைப்புகளுக்கான அதிகபட்ச (சீலிங்) கட்டணத்தை குறைத்துள்ளது. இது, வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது ரோமிங்கில் இருக்கும்போது, எஸ்.டி.டி. அழைப்புக்கான அதிகபட்ச கட்டணத்தை ரூ.1.50ல் இருந்து ரூ.1.15 ஆக டிராய் குறைத்துள்ளது.

இதேபோல், ரோமிங் எஸ்.எம்.எஸ். கட்டணத்தை ரூ.1.50ல் இருந்து 38 பைசாவாக குறைத்துள்ளது. உள்ளூர் எஸ்.எம்.எஸ்.சுக்கான அதிகபட்ச கட்டணம், ஒரு ரூபாயில் இருந்து 25 பைசாவாக குறைகிறது. உள்ளூர் அழைப்புக்கான அதிகபட்ச கட்டணம் ஒரு ரூபாயில் இருந்து 80 பைசாவாக குறைகிறது. ரோமிங்கில் இருக்கும்போது, இன்கமிங் அழைப்புக்கான கட்டணம் 75 பைசாவில் இருந்து 45 பைசாவாக குறைகிறது.

செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மேற்கண்ட கட்டண குறைப்பு சாதகமாக இருந்தாலும், அவர்களுக்கு பாதகமான சில நடவடிக்கையையும் டிராய் எடுத்துள்ளது. ரோமிங் கட்டண திட்டம் ஒன்றை செல்போன் சேவை நிறுவனங்கள் வழங்கி வந்தன. இத்திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு, ரோமிங்கில் இருக்கும்போது உள்ளூர், எஸ்.டி.டி. அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.சுக்கான கட்டணம், அவர்களது சொந்த தொலைத்தொடர்பு வட்டத்தில் உள்ள அதே கட்டணமாகவே இருக்கும்.

ஆனால், இந்த ரோமிங் கட்டண திட்டத்தை டிராய் ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் கீழ், இலவச இன்கமிங் அழைப்புகளை மட்டும் அனுமதிக்கும் சிறப்பு ரோமிங் கட்டண திட்டத்தை அமல்படுத்துமாறு செல்போன் சேவை நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது