வீர வணக்கம்

மறைந்தார் தியாகி ஐ. மாயாண்டி பாரதி!


தமிழகத்தின் மூத்த தியாகி ஐ.மாயாண்டி பாரதி இன்று(24.2.2015) மறைந்தார். 

ஐ. மாயாண்டி பாரதி - இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர் என்று பண்முகம் கொண்டவர்.

 இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த இவர் , தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களின் வழியாகப் பொதுவுடமைக் கருத்துகளைப் பரப்பினார்.

 மதுரை நகரின் மேலமாசி வீதியில் 70-ம் எண் வீட்டில் வாழ்ந்த இருளப்பன் – தில்லையம்மாளுக்கு 11-வது குழந்தையாக 1917 ஆம் ஆண்டில் பிறந்தார் ஐ.மாயாண்டிபாரதி. பத்தாம் வகுப்பு வரை படித்தார்.

1935 ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் பொழுதும் அதே காலகட்டத்தில் ஹாசிமூசா துணிக்கடையின் முன்னர் நடந்த அந்நியத்துணி விலக்குப் போராட்டம் நடந்தபொழுதும் பள்ளி மாணவரான மாயாண்டி பாரதி தன் லஜபதிராய் வாலிபர் சங்க நண்பர்களுடன் சென்று வேடிக்கை பார்த்தார். அந்நியத்துணி விலக்குப் போராட்டத்தில் அடிபட்டவர்களை மருத்துவம் நடைபெறும் இடத்திற்குக் கயிற்றுக்கட்டிலில் தூக்கிக்கொண்டு செல்வது இவர்களது பணி.

1938 ஆம் ஆண்டு முதல் மாயாண்டி பாரதி நேரடி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினார். அவ்வாண்டு இராசபாளையத்தில் தமிழ் மாகாண காங்கிரசு மாநாடு நடபெற்றது. அம்மாநாட்டிற்கு ‘ திருப்பூர் குமரனுக்கு நினைவுச் சின்னம் எழுப்புக’ என்னும் கோரிக்கையைத் தன் நண்பர்களோடு இணைந்து பிரச்சாரம் செய்தவாரே சென்றார். அங்கே ம. கி. திருவேங்கடம், கே. இராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியன் ஆகியோரின் நட்புக் கிடைத்தது. அவர்களின் அழைப்பின்பேரில் இதழியப் பணியாற்ற 1939 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாயாண்டி பாரதி சென்னைக்குச் சென்றார். காங்கிரசு இயக்கத்தில் இணைந்தார்.

பின்னர் 1940 ஆம் ஆண்டில் மதுரைக்குத் திரும்பினார். 1939 ஆம் ஆண்டில் இந்திய முசுலீம்கள் பாகிஸ்தான் கோரினர். இதனால் இந்திய தேசிய காங்கிரசில் இருந்த முசுலீம்கள் முக்கியத்துவம் இழந்தனர். பாகிஸ்தான் கோரிக்கை எதிர்த்து இந்து மகா சபை உருவாக்கப்பட்டது.  1940 ஆம் ஆண்டில் மாயாண்டி பாரதி மதுரை இராமநாதபுரம் மாவட்ட இந்துமகாசபை அமைப்புச் செயலாளராக இருந்தார். அப்பொழுது சாவர்க்கரை மதுரைக்கு அழைத்து வந்தார். அப்பொழுது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்தது. இளைஞர்கள் படையில் சேர்க்கப்பட்டார்கள். அதனை எதிர்த்துச் சாத்தூர் பகுதியில் போர் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தினார். 

இதனால் 1940ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு திருவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதச் சிறையும் 50 ரூபாய் தண்டமும் சிவகாசி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை, திருச்சி, வேலூர், கோயமுத்தூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டு 1941 மார்ச் 21 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் சிறைவாசலில் கைதுசெய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் பாதுகாப்புக் கைதியாகச் சிறையில் இருந்தார்.

 1942ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற அவர், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்பொழுது பாதுகாப்புக் கைதியாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1943ஆம் ஆண்டில் வெளியே வந்த அவர் மீண்டும் கைது செய்யப்பட்டபொழுது, அவ்வண்டிக்கு பின்னால் ஓடிவந்த அவர் தாயார் மரணமடைந்தார். சிறையில் இருந்த மாயாண்டி பாரதியால் தன் தாயின் இறுதிச்சடங்கில் கூடக் கலந்துகொள்ள முடியவில்லை.

மாயாண்டி பாரதி சிறையில் இருந்தபொழுது, இந்து மகாசபையினர் அவரிடம் இரண்டாம் உலகப் போர் எதிர்ப்பு நடவடிக்கையில் இனி ஈடுபடுவது இல்லையென மன்னிப்பு கடிதம் எழுதி அரசுக்குக் கொடுத்துவிட்டு விடுதலை ஆகும்படி கூறினர். மாயாண்டி பாரதி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இந்து மகா சபையிலிருந்து விலகினார்.

போர் எதிர்ப்புக் கைதியாக 1941 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் சிறையில் இருந்தபொழுது பொதுவுடைமைத் தலைவர்களான ஜமத்கனி, வி. பி. சிந்தன், கே. ஏ. தாமோதரன் ஆகியோரை மாயாண்டி பாரதி சந்தித்தார். அவர்கள் நடத்திய மார்க்சிய வகுப்பால் ஈர்க்கப்பட்டு, பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.

1941ஆம் ஆண்டில் மதுரை ஹார்விமில் தொழிலாளர் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அதனால் மீண்டும் கைது செய்யப்பட்டு மதுரை, திருச்சி, வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். அங்கே கே. பி. கிருஷ்ணா என்பவரிடம் மார்க்சியம் பயின்றார். தண்டனைக் காலம் முடிந்து 1942 ஜூலையில் விடுதலை ஆனார். மதுரையில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் ஆனார்.

1942 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆகத்து புரட்சியில் கலந்துகொண்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அப்பொழுது அவர்தம் அம்மா காலமானார். அந்தச் சாவிற்கு மாயாண்டி பாரதியை அனுப்ப அன்றைய பிரிட்டிசு அரசு மறுத்துவிட்டது. பின்னர் தண்டனை முடிந்து 1944 ஆம் ஆண்டில் விடுதலையானார்.

திரு.வி. க. ஆசிரியராக இருந்த நவசக்தி இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 

1944ஆம் ஆண்டு பி. இராம்மூர்த்தியின் அழைப்பின்பேரில் சென்னைக்குச் சென்று 1964 ஆகஸ்ட் 15 ஆம் நாள் வரை ஜனசக்தியில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.  பின்னர் 1966 ஆம் ஆண்டு முதல் தீக்கதிர் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டில் அவ்விதழிலிருந்து ஓய்வு பெற்றார்.

1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மாயாண்டி பாரதி தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு சமூகப் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை நடத்திய மாயாண்டி பாரதி, தள்ளாத வயதிலும் முதுமையைப் பொருட்படுத்தாமல், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வருவதற்காகப் போராடினார்.